TBCD யின் நிறைவேறாத குல்ஃபி ஐஸ் ஆசை - 06-08-2008 சென்னை பதிவர் சந்திப்பு

நீண்ட நாட்களாக பதிவே போடாமல் இருந்தபோதிலும் கூட சொந்தமாக ஜிங்காரோ ஜமீன் என்ற உலக புகழ்பெற்ற ஒரு வலைப்பூ வைத்திருந்த ஒரே காரணத்தால் நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என வடிவேலு போலிஸ் ஜீப்பில் ஏறியதைபோல் நானும் பதிவர்தான் என வழக்கம்போல் இந்த பதிவர் சந்திப்பிலும் போய் ஒரு அட்டெனென்சை போட்டோம்.

TBCD அண்ணாச்சி விடுத்த அழைப்புக்கு கண்டிப்பாக வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல் போனவர்களைவிட, முன்னறிவிப்பின்றி வந்தவர்களே அதிகம். நாங்கள் அங்கே சென்றடைந்தபோது பதிவர் சந்திப்பின் நாயகன் TBCD, முரளிகண்ணனும் ஏற்கனவே ஆஜராகியிருந்தனர். கொஞ்சநேரத்தில் நரசிம் மற்றும் அவரது நண்பர் சம்பத் ஆகியோர் வந்தனர். பின்னாலேயே டாக்டர் புருனோவும் வந்துசேர்ந்தார். மற்ற பதிவர்களும் வந்துசேரட்டும் என காத்திருக்க ஆரம்பித்த நேரத்தில் பொதுவாக பேசியபடியே அமர்ந்திருந்தோம்.

கடலை போட பெண் பதிவர்கள் யாரும் வரவில்லையே என்ற குறையை டாக்டர் புருனோ வறுத்த கடலையை ஸ்பான்ஸர் செய்து தீர்த்து வைத்தார்.

சிறிதுநேரத்தில் யூத்விகடன் புகழ் லக்கிலுக், அதிஷா, கடலையூர் செல்வம், சிவஞானம்ஜி ஐயா, வளர்மதி, தலை யெஸ்.பாலபாரதி என அனைவரும் வந்துசேர பல விஷயங்கள் குறித்து பரபரப்பாக அலசப்பட்டது.

பேசிய விஷயங்களை குறித்து தெரிந்துகொள்ள வேண்டுமானால் டாக்டர் புருனோ அவர்களின் இந்த பதிவை படித்துபாருங்கள்.

TBCDயோ நீண்ட நேரமாக காந்தி சிலையின் அருகே விற்றுகொண்டிருந்த குல்ஃபி ஐஸ் வண்டியை பார்த்தவாறே "குல்ஃபி சாப்பிடலாமா?" என ஒவ்வொருவராக கேட்டு கொண்டிருந்தார். பரபரப்பான விவாதங்களுக்கு இடையிலும்கூட அவ்வப்போது குல்ஃபி ஐஸ் வண்டியையே ஆவலாக திரும்பிதிரும்பி பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் ஒருவரும் துணைக்கு வராததால் கடைசிவரைக்கும் குல்ஃபியை சாப்பிடாமலே கிளம்பிவிட்டார். :(

கடைசியில் வழக்கமான டீக்கடையில் தேநீர் பான விருந்துடன் சந்திப்பு 9 மணிக்கு இனிதே முடிவடைந்தது.


விடுபட்டவை:

1. TBCD பதிவில் கலந்துகொள்பவர்களுக்கு சூடான போண்டா தருவதாக சொல்லியிருந்தபடி கடைசிவரைக்கும் போண்டா வாங்கி தரவே இல்லை.

2. அதிஷா கலந்துகொள்ளும் பதிவர்கள் அனைவருக்கும் பத்துக்கு பத்து டிவிடி இலவசமாக வழங்கப்படும் என சொன்னதும் நடக்கவில்லை.